கடையடைப்பில் பங்கேற்காத ஸ்வீட் ஸ்டாலை அடித்து நொறுக்கிய அதிமுகவினர்: ஆரணியில் பரபரப்பு
திருவண்ணாமலை: கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடாத ஸ்வீட் ஸ்டால் அதிமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் ஆரணியில் நடந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினரின் நெருக்கடியாலும், மிரட்டலாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கச் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களின் உத்தரவை ஏற்று அந்தந்த துறை தொடர்பான போராட்டங்களை நடத்த, அடிமட்ட நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான ஸ்வீட் ஸ்டால் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிமுகவினர் வந்து அனைவரும் கடைகளை மூடி போராட்டம் நடத்துகிறார்கள். நீங்களும் கடையை மூடுங்கள் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் பக்ரித் பண்டிகையையொட்டி நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தை கடையை மூடினால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வெங்கடேசன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் இனிப்பு கடையை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஆரணி வணிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.