அரசு அனுமதி பெறாத நீச்சல்குளம்... நீரில் மூழ்கி மாணவர் பலி: வீடியோ
அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த நீச்சல்குளத்தில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.
காரைக்குடி: காரைக்குடியில் அரசிடம் அனுமதி பெறாத தனியார் நீச்சல்குளத்தில் நீச்சல் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.
காரைக்குடி பொன் நகரில் செண்பக மூர்த்தி என்பவர் தன் வீட்டின் பின்புறம் ஒரு நீச்சல்குளத்தை அமைத்துள்ளார். அதில் கட்டணம் வசூலித்து நீச்சல் கற்றுத் தரப்படுகிறது. இந்த நீச்சல்குளம் அரசின் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது.
இந்நிலையில், இநத நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சிக்குச் சென்ற திருமுகில் திலீபன் என்கிற பத்தாம் வகுப்பு மாணவர், நீரில் மூழ்கி பரிதவித்துள்ளார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அரசின் அனுமதி பெறாமல், உரிய விதிமுறைகள் இல்லாமல் நீச்சல்குளங்கள் கட்டப்பட்டு பல ஊர்களில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு, பயிற்சி பெற்ற பயிற்றுநர்களும் இல்லாத காரணத்தால் இம்மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் உள்ள தனியார் நீச்சல்குளங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கை.