வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: 2 மாதத்தில் 16 பேர் பலி- 1200 பேர் பாதிப்பு
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமாக பரவுகிறது. கடந்த 2 மாதத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 1200 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 1,200க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக்காய்ச்சலால் கடந்த 2 மாதங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் மட்டும் 37 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியோடு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2009-10ஆம் ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாக காணப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுகாதாரத்துறை எடுத்த நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப் பட்டது.
பரவும் பன்றிக்காய்ச்சல்
இந்நிலையில், தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுவன் மரணம்
திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருச்சி அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஜீவானந்தம் அருகிலுள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் சிறுவன் ஜீவானந்தத்துக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் ஜீவானந்தத்துக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை ஜீவானந்தம் உயிர் பிரிந்தது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிப்பு
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. ஈரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டையடுத்த வில்லரசன்பட்டியை சேர்ந்த சத்தியபிரியா, அவரது மகள் நந்திதா மற்றும் அவர்களது உறவினர் விஜயா ஆகியோருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கைகளை கழுவுங்கள்
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகின்றன. நம்முடைய கைகளில் ஒட்டிக்கொள்ளும் கிருமிகள்தான் நோய் தொற்றுக்குக் காரணமாகின்றன. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொட்டால் கிருமித் தொற்று ஏற்படுகிறது. அதனால் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
104ஐ தொடர்பு கொள்ளுங்கள்
சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலால் கர்ப்பிணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பன்றிக்காய்ச்சல் குறித்த சந்தேகத்துக்கு மருத்துவ உதவி சேவை மையத்தை 104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.