ஓபிஎஸ்ஸுக்கே இரட்டை இலை கிடைக்கலன்னா... சசிக்கு மட்டும் எப்படி கிடைக்கும்.. கே.சி. பழனிச்சாமி கேள்வி
ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் பொதுச் செயலாளராக இல்லாத சசிகலாவிற்கு எப்படி கிடைக்கும் என்று கே.சி. பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் கிடைக்கப் போவது யாருக்கு என்பது இன்று முடிவாக உள்ளது. அது தங்கள் அணிக்கே கிடைக்கும் என்று ஓபிஎஸ் அணியினர் உறுதியாக நம்பியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பாரா, இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து இரு அணியினரிடம் தேர்தல் ஆணையம் இன்று நேரில் விசாரணை நடத்துகிறது.
இதுகுறித்து இன்று மாலையே தனது முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவிற்கு எதிர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியும் ஓபிஎஸ் அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் விளக்கங்களை கேட்டுப் பெற்றுள்ளது.
இன்று ரிசல்ட்
அதைத் தொடர்ந்து இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்களை அளித்துள்ளனர். மேலும், இது தொடர்பான கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பினரும் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
இலை எங்களுக்கே..
இந்நிலையில், தங்களுக்கே இரட்டை சிலை சின்னம் உறுதியாகக் கிடைக்கும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ கே.சி. பழனிச்சாமி என்று தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்கு கிடைப்பதற்கான அனைத்து விளக்கங்களையும் தேர்தல் ஆணையத்திடம் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
சசிக்கு இல்லை இலை
கட்சியின் விதிப்படி சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்கிற போது கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனும், பொருளாளர் ஓபிஎஸ்ஸும்தான் கட்சியை வழி நடத்த வேண்டும். அப்படி இருக்கும் போது கட்சியின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக மதுசூதனனுக்கே இரட்டை இலை கிடைக்கும் என்றும் கே.சி. பழனிச்சாமி உறுதிபடக் கூறியுள்ளார்.
சின்னம் முடக்கம்
அப்படி ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால், சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படுமே தவிர சசிகலாவிற்கு நிச்சயம் சின்னம் கிடைக்காது என்றும் கே.சி. பழனிச்சாமி கூறியுள்ளார். ஓபிஎஸ் அணியினர் உறுதியுடன் செயல்படுவதை பார்த்தால் சசிகலா தரப்பிற்கு பெரும் சிக்கலாகத்தான் இருக்கும் என்று சசிகலா ஆதரவாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.