சிஸ்டம் சரியில்லாட்டி.. சினிமாவில் நடித்த பணத்தை திருப்பி தாருங்கள்.. ரஜினிக்கு வேல்முருகன்
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றால், சினிமாவில் நடித்த பணத்தை ரஜினிகாந்த் திருப்பி தருவாரா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது ஏற்புடையது அல்ல என்று வேல்முருகன் தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுகள்தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. டிவி சேனல்களில் விவாதங்கள் வைக்கும் அளவுக்கு சென்றுவிட்டன. அதிலும் அவர் நேற்று பேசிய கருத்துகள் பல தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நண்பர்கள் என்று கூறியவர்களும் இன்று அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவு நாளான நேற்று ரஜினி பேசுகையில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார்.
என்னாது சிஸ்டம் சரியில்லையா?
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவிக்கையில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது ஏற்புடையது அல்ல. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த ரஜினி இன்று கார், பங்களா, பெயர், புகழ் என்று பெற்றது இந்த சிஸ்டத்தில் இருந்துகொண்டுதான்.
அரசிடம் ஒப்படைப்பாரா?
சரியில்லாத சிஸ்டத்தில் இருந்து கொண்டு சம்பாதித்த அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க முன்வருவாரா? அவர் நடித்த ஒவ்வொரு படத்துக்கும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500, ரூ.1000, ஏன் ரூ.2000 வரை விற்பனை ஆனது. அப்போது சிஸ்டம் சரியில்லை, அதனால் அதிக கட்டணம் கொடுத்து படம் பார்க்காதீங்கன்னு ரசிகர்கள்கிட்ட சொல்ல வேண்டியதுதானே? சொன்னாரா இல்லையே.
பணத்துக்காக மாற்றி பேசுகிறார்
அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் சினிமா டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் சொல்வாரா? தமிழகத்திலும், கர்நாடகத்திலும் தொழிலுக்காக மாறி மாறி பேசும் ரஜினிக்கு சிஸ்டம் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. பிரதமர், ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசியல்வாதிகள் என அனைவர் மீதும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வருகின்றன. அவர்கள் கூட இப்படி விமர்சித்தது இல்லை. ஆனால் தன்னை கீழ்த்தரமாக விமர்சிப்பதாக ரஜினி கூறுகிறார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?
அப்படியென்றால் ரஜினி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? தமிழர்களை இழிவுபடுத்தி சொன்ன வார்த்தையை அவர் திரும்ப பெற வேண்டும். 7 கோடி தமிழர்களில் ஒருவர்தான் ஆளுவதற்கு தலைமை தாங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மற்ற மாநிலத்தவர்கள் கூடாது.
தமிழகத்தை இளைஞர்கள் பார்த்து கொள்ளட்டும்
குடிக்கு அடிமையாகாத இளைஞர் சமுதாயம், படித்தவர்களில் ஒருவர் தூய்மையான அரசியல்வாதி என தமிழகத்தை ஆட்சி செய்ய திறமைசாலிகள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் தமிழகத்தை பார்த்துக் கொள்வார்கள் என்றார் வேல்முருகன்.