30% கேளிக்கை வரியால் தமிழ் சினிமா அழிந்து விடும் - எச்சரிக்கும் டி.ராஜேந்தர்
28%ஜிஎஸ்டி வரி, 30% கேளிக்கை வரியால் தமிழ் சினிமா அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான நடிகர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை: உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. கூடவே 30 சதவிகித கேளிக்கை வரியால் தமிழ் சினிமா அழிந்து விடும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சினிமா டிக்கெட்டிற்கு தமிழக அரசு விதித்துள்ள 30 சதவிகித கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி ஜெமினி மேம்பாலம் அருகே திரைப்பட வர்த்தக சபையில் டி.ராஜேந்தர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ஜிஎஸ்டி வரிக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
58 சதவிகித வரியா?
ஜிஎஸ்டி வரி சினிமா டிக்கெட்டிற்கு 28% விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கேளிக்கை வரியும் 30 சதவிகிதம் என்றால் சிறு தயாரிப்பாளர்கள் தாங்குவார்களா? என்னை வாழ வைத்த தமிழ் சினிமாவிற்காக போராடுகிறேன் என்றார். ஆனால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, பங்கேற்கக் கூடாது என்று மிரட்டப்பட்டதாகவும் ராஜேந்தர் கூறினார்.
உலகத்திலேயே அதிகம்
உலகத்திலேயே இந்தியாவில்தான் 28% சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. வல்லரசு நாடுகளில் கூட வரி இந்த அளவிற்கு இல்லை. சிங்கப்பூரில் 7 சதவிகிதம்தான் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வரி குறைவுதான். ரஷ்யாவில் 18 சதவிகிதம்தான் வரி. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் 28 சதவிகிதம் என்று கேள்வி எழுப்பினார்.
பணக்கார நாடா?
மோடி உலகம் முழுவதும் சுற்றி வருவதால் இந்தியாவை பணக்கார நாடு என்று நினைத்து விட்டாரா? இங்கே ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாத ஏழைகள் அதிகம் உள்ளனர்.
குடிநீருக்கும் வரி
சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. நாங்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடித்தால் அதற்கும் வரி விதிப்பது நியாயமா என்றும் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் டி. ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.