ஜெயம் ரவி படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார் டி ராஜேந்தர்
சென்னை: "ரோமியோ ஜூலியட்' படத்தை "டண்டனக்கா நக்கா நக்கா..' பாடலுடன் வெளியிடுவதற்குத் தடை கோரி நடிகர் டி.ராஜேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிடவும் மனுவில் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
எனது தனித்துவமான நடிப்பு, வசன உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவை, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள "ரோமியோ ஜூலியட்' என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "டண்டனக்கா நக்கா நக்கா' என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதி, இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
விளம்பர நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுக்கள், வசனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
என்னுடையப் பேச்சுகள், வசனங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அது தொடர்பாக என்னிடம் அனுமதியும் பெறவில்லை.
எனது ரசிகனாக ஜெயம்ரவி இந்தப்படத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதனால், படம் முழுவதும் என்னைப் பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது. எனவே, 'ரோமியோ ஜூலியட்' படம் வெளியாவதற்கு முன்பு சட்ட ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்து, படத்தின் காட்சிகள், வசனங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அவ்வாறு நியமிக்கவில்லையெனில் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.
தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகளிலும் அந்தப் பாடலை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்.
என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க படத் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.