ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் போராட்டம்.. டி.ராஜேந்தர் நேரில் சென்று ஆதரவு
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மாணவர்களை விடுதலை செய்யக் கோரி சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு திரைப்பட நடிகர் டி. ராஜேந்தர் ஆதரவு தெரிவித்தார்.
சென்னை: அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி. ராஜேந்தர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி வாடிவாசல் அருகில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற போராடி வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தின் போது முழக்கங்களை மாணவர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி. ராஜேந்தர். முன்னதாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவரது மகன் சிம்பு நடத்திய மவுனப் போராட்டத்தில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர், மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்திலும் தற்போது பங்கேற்றுள்ளார்.