வெளிநாட்டில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு என்ன வேலை? விசாரணை கமிஷன் அமைக்க போகிறாராம் ஃபெரா தினகரன்!
வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்லும் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு எதிராக விசாரணை கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று ஆர்.கே.நகர் தொகுதியின் சசிகலா அணி வேட்பாளர் தினகரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை: வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்லும் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு எதிராக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என்று சசிகலா அணியும் , ஓபிஎஸ் அணியும் மாறி மாறி உரிமை கொண்டாடுகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் குறித்து இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டியதால் அதுகுறித்து வரும் 22-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஜெயலலிதா மறைவையொட்டி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு 6 முனை போட்டி நிலவுகிறது. சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் மக்களின் செல்வாக்கு யாருக்கு என்பதை அறிந்து கொள்ள இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றன.
தீவிர பிரசாரம்
இதனால் அதிமுகவின் இரு அணிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களான மதுசூதனனும், தினகரனும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் பங்குக்கு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
ஜெ.பிறந்தநாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
நீதி விசாரணை
ஓ.பன்னீர் செல்வம் 72 நாள்களாக முதல்வராக இருந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோராமல் பதவிக்காக அமைதியாக இருந்தார். அவ்வாறு அமைக்கப்பட்டால் முதல் குற்றவாளியாக ஓபிஎஸ் தண்டிக்கப்படுவது நிச்சயம். ஓபிஎஸ் மகன், மருமகன்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.
விசாரணை கமிஷன்
இதுகுறித்து விரைவில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001-இல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அவர் சென்னைக்கு வரும்போது பொருளாதார ரீதியில் அவர் எந்த நிலையில் இருந்தார் என்பது எனக்கு தெரியும்.
வசதிகள் எப்படி?
தற்போது அவருக்கு நிறைய சொத்துகளும், வசதி வாய்ப்புகளும வந்தது எப்படி? இந்த விவகாரத்தில் விரைவில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை என்றார்.