டெங்கு காய்ச்சல்.. தொடரும் பலி.. என்ன செய்கிறது அரசு?.. ராமதாஸ் கேள்வி!
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு கடந்த வாரத்தில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். 25 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசின் மீது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணன், திருத்தணியைச் சேர்ந்த யுவராஜ் என்ற 4 வயது சிறுவன், சந்தோஷ் (4), மோகன் குமார் (5) மோகன் (9) என ஐந்து பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவருமே டெங்கு காய்ச்சலால்தான் இறந்தனர் என்பதை மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொண்டாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயங்குகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக டெங்கு காய்ச்சலில் இறப்போரின் எண்ணிக்கை அதிகாரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு தமிழக அரசும், சுகாதாரத் துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை தமிழக அரசு வெளிப்படையாக ஒத்துக் கொண்டு அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்தியா விடுதலை பெற்று 69 ஆண்டுகள் ஆன பின்னரும், டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் உயிரிழப்பது மிகப் பெரிய அவலமாகும் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் பதற்றமடையாமல் பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடியுங்கள் என்றும், நில வேம்பு கசாயத்தை பருகுங்கள் என்றும் ஒரு டாக்டராக பல டிப்ஸ்களையும் தனது அறிக்கையில் வழங்கியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.