வெளிநாடுகள் போல் வீணாகும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை தேவை: ஞானதேசிகன் வலியுறுத்தல்
சென்னை: மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு வீணாகும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகிழ்ச்சி....
"தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. சில மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல மழை பெய்திருப்பது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
நிவாரணம்...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் சென்னையில் கடந்த 3 நாட்களாக மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள தண்ணீர், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் சென்னை மாநகரம் சீர்குலைந்துள்ளது. உடனடியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கி சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.
மழை நீர் சேமிப்பு...
மழைக்காலங்களில் வீணாகும் நீரைச் சேமிக்க அரசு திட்டமிட வேண்டும். சில வெளிநாடுகளில் பூமிக்கு அடியில் மழை நீரை சேமிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நீரை அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் உபயோகப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இது போன்ற மாற்று திட்டங்களை தமிழக அரசு யோசிக்க வேண்டும்.
காவிரி நீர்...
காவிரி பாசன மாவட்டங்களில் மிகப்பெரிய ஏரிகளை உருவாக்கி மழைக் காலங்களில் காவிரி நீர் கடலில் கலக்காமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட வேண்டும் ".
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.