வரி விலக்குள்ள பொருட்களின் விலையைக் கூட்டி விற்றால் கடும் நடவடிக்கை.. ஜெயக்குமார் வார்னிங்
ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் மீது வரி விதித்து விலையைக் கூட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டியில் இருந்து சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருட்களின் விலையை கூட்டி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
சென்னையில் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனை தீர்க்கப்படும். கேளிக்கை வரி பற்றி முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும். பின்னர், நல்ல முடிவு எடுக்கப்படும்.
வணிகர்கள், உற்பத்தியாளர்கள், சேவை தொழில்களில் உள்ளவர்களின் தொழில் காக்கப்படும் வகையில் 20 லட்சம் ரூபாய் அளவிற்கு வருவாய் இருந்தால் அவர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
25 லட்சம் ரூபாயில் இருந்து பல்வேறு வகையில் வரிவிதிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தேவையில்லாமல் ஜிஎஸ்டி குறித்து அச்சப்படத் தேவையில்லை.
அதே போன்று வரி இல்லாத பொருட்களுக்கு வரி விதித்து விலையை கூடுதலாக விற்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்டதற்கு மேல் பணம் பெறப்பட்டது தெரிய வந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று ஜெயக்குமார் கூறினார்.