மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கம்
சென்னை: மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தாம்பரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதனை அறிவித்துள்ளார். தமீமுன் அன்சாரியின் ஆதரவாளரும் இணைப்பொதுச்செயலாளருமான ஆரூண் ரஷீத்தும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் மனித நேய மக்கள் கட்சியின் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. மதிமுக,கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்றது.
கருத்து வேறுபாடு
மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று வறிய அவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இதனால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மக்கள் கூட்டியக்க போராட்டங்களில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரிக்கும், கட்சி தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவானது. இதன் ஒரு பகுதியாக இரண்டு இடங்களில் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. இது மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
கட்சியை உடைக்க சதி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்ததலைவர் ஜவஹிருல்லா, 92 சதவீத நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியில் தான் உள்ளனர். போட்டி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள தமீமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கட்சியை உடைக்க சதி நடக்கிறது என்று கூறிய அவர், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது நல்ல முறையில் தான் நடத்தினர் என்றும் கூறினார்.
தமீமுன் அன்சாரி
அதேநேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமீமுன் அன்சாரி, மனித நேய மக்கள் கட்சியின் கொள்கையின் படி,கட்சியின் பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கு மாத்திரமே உண்டு.அந்த வகையில் இன்று சென்னை எக்மோரில் நடைபெறவுள்ள பொதுக் குழுக் கூட்டமே மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரபூர்வமான கூட்டம் என்றார்.
அவருக்கு அதிகாரமில்லை
பேராசிரியர் ஜவாஹிருல்லா எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மாத்திரமே,அவர் கட்சியில் எந்த நிர்வாகத்திலும் பங்கு வகிக்கவில்லை.இந்த நிலையில்,அவர் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுத்திருக்கும் பொதுக் குழுக் கூட்டம் என்பது சட்ட விரோதமானது.பேராசிரியர் அவர்களின் இந்த செயல் எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்துள்ளதுஎன தெரிவித்தார்
எழும்பூர் பொதுக்குழு ரத்து
தாம்பரம், எழும்பூர் என இரண்டு இடங்களில் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் எழும்பூரில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்து விட்டதாக அறிவித்தார் தமீமுன் அன்சாரி. கட்சியின் நலனைக் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறிய அன்சாரி, கட்சி உடைந்து போய்விடக்கூடாது என்று பலரும் அக்கறை காட்டினர், பலரும் சமாதான முயற்சியில் ஈடுபட்டதால் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்துவிட்டதாக கூறினார்.
தாம்பரத்தில் அவசரக் கூட்டம்
இதனிடையே தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இதனையடுத்து கூடிய பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரியும், இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அருண் ரஷீத்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கட்சியில் உறுப்பினர்களாக நீடிக்க எந்த வித தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமீமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.