தமிழ் புத்தகங்களுக்கான தனிப்பிரிவு- சென்னை அமெரிக்க நூலகத்தில் துவங்கி வைத்தார் வைரமுத்து
சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க நூலகத்தில் தமிழ் நூல்களுக்கான தனிப்பிரிவை கவிஞர் வைரமுத்து நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணைதூதர் அலுவலகத்தில் உள்ள நூலகம் 15 ஆயிரம் ஆங்கில நூல்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தில் முதன் முறையாக இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 200 நூல்கள் இடம் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்க துணைதூதர் பிலிப் மின் தலைமை தாங்கினார்.
தமிழ் நூல் பிரிவு தொடக்கம்:
துணைதூதர் அலுவலக பொது விவகார துறை அதிகாரி ஏரியல் பொல்லாக் வரவேற்றார். கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவை தொடங்கி வைத்தார்.
1947ல் தொடக்கம்:
அதில் அவர், "அமெரிக்க துணைதூதர் அலுவலகத்தில் கடந்த 1947 ஆம் ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டது. இதுவரை இங்கு ஆங்கில நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. தற்போது முதன் முறையாக 200 தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு என்று தனிப்பிரிவு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நூல்களின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருந்தாலும் இது ஒரு தொடக்கம் தான்.
வாசிப்பது ஒரு யோகம்:
நம் நாட்டுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தாலும், அமெரிக்க நூலகத்தில் 2015 ஆம் ஆண்டு தான் தமிழுக்கு சுதந்திரம் கிடைத்து உள்ளது. அனைவரும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பது என்பது ஒரு யோகமாகும். புத்தகம் என்பது நாம் வரம் பெற யாரோ செய்த தவமாகும்.
தமிழ் நூல்களும் இடம்பெற வேண்டும்:
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனேக நாடுகளில் மொழியே பிறக்காத நிலையில், நாம் அப்போதே இலக்கியங்களை படைத்துள்ளோம். எனவே பழமையான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட நம்முடைய பண்டைய இலக் கிய நூல்களின் எண்ணிக்கையை நூலகத்தில் அதிகரிப்பதுடன், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட செவ்வியல் இலக்கியங்களும் அமெரிக்காவில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும்.
தமிழை அழைத்ததற்கு நன்றி:
துணைத்தூதருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நூலகத்திற்கு என்னை அழைத்ததற்காக அல்ல, எனக்கு முன்பாக தமிழை அழைத்ததற்காக.
காற்றுக்கு திசை இல்லை, அறிவுக்கு தேசம் இல்லை.
சிறுகதைகள் உபயம்:
அறிவு என்பது மனிதகுலம் அனைத்துக்கும் பொதுவானது. அது ஓர் இடத்தில் தோன்றினாலும், அது உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். தமிழ் மொழியில் முதலில் சிறுகதைகள் கிடையாது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எட்கர் ஆலம்பே சிறுகதைகளை உலகிற்கு கொடுத்தார். அதேபோல் முதலில் புதுக்கவிதைகளும் தமிழில் இல்லை. அதுவும் அமெரிக்க எழுத்தாளர் வால்ட் விட்மன் தான் கொடுத்தார்.
கட்டிலும், தொட்டிலும்:
நான், அமெரிக்கா சென்ற போது 2 இடங்களை பார்க்க ஆசைப்பட்டேன். ஒன்று "நயாகரா" நீர்வீழ்ச்சி மற்றொன்று எழுத்தாளர் வால்ட் விட்மன் பிறந்த வீடு. இதில் வால்ட் விட்மன் பிறந்த வீட்டில் அவர் பிறந்த கட்டிலையும், அவர் ஆடிய தொட்டிலையும் தொட்டுப் பார்த்து வந்தேன்" என்று பேசினார்.