இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 34 பேர் தாயகம் திரும்பினர்
காரைக்கால்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேர் நேற்று மாலை காரைக்கால் துறைமுகம் வந்துசேர்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதியன்றும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஏப்ரல் 27-ஆம் தேதியன்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் 34 பேரும் எல்லை தாண்டி, இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 34 பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக் கப்பட்ட மீனவர்கள் அனைவரும் ரோந்து கப்பல் மூலம் நேற்று மாலை காரைக்கால் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நாகை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.