தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் மரணம் - தமிழக அரசு தகவல்
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை டெங்குகாய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில் கொசு மூலம் பரவக்கூடிய நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால், கொசுக்கள் கடிக்காமல் பாதுகாத்தாலே கொசு மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்தலாம்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் டெங்கு,சிக்கன் குன்யா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியானார். ஆனால், அதற்கு காரணமான கொசுவை ஒழிக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், கொசுக்களை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அதற்கான நடவடிக்கையை அரசு பின்பற்றவில்லை.
ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை பேரையூர், வாணியம்பாடி பகுதியில் கொசுவால் பரவும் டெங்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் அவர்களுக்கென தனி வார்டு அமைக்கவில்லை. சாதாரண சிகிச்சையை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால், தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிப்பதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கொசு வலை வழங்க வேண்டும். டெங்கு,சிக்கன்குன்யா மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு,24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். அந்த நோய்களுக்கான மருந்து, மாத்திரைகளை இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. அவர் விடுத்துள்ள உத்தரவில், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் மாவட்ட ரீதியாக டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் பட்டியலை விரிவான அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த வழக்கு தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டெங்குவை தவிர்த்து பிற காய்ச்சல் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சிக்கன் குனியா காய்ச்சலுக்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றும் அந்த மனுவில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளார்.