வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்- களம் குதித்த லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள்!
ஜல்லிக்கட்டை பாதுகாப்போம் இதுதான் இன்றைக்கு தமிழக இளைஞர்களின் தாரக மந்திரம். தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் போராடி
சென்னை: 'வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் ' இது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களின் முழக்கம்.
சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டரில் இன்றைய இளைய சமுதாயம் தொலைத்து கொண்டிருக்கிறது என்று இளைய சமுதாயத்தினர் மீது ஒருவித குற்றச்சாட்டு இருந்தது.
அதே சமூக வலைத்தளங்கள் மூலம் இன்றைக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள், ஒன்றிணைந்து தமிழகர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை காக்க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.
தை பொங்கல் திருநாளுக்கு முன்பாக கடந்த 8ஆம் தேதி சென்னையில் ஒரு தீப்பொறியாக பற்றியது போராட்டம். பொங்கல் பண்டிகை முடிந்தும் பற்றி பரவி கொளுந்து விட்டு எரிகிறது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்.
சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 40 கல்லூரி மாணவர்கள்
சென்னை மெரீனா கடற்கரையில் இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று 40 கல்லூரி மாணவர்கள் அலை அலையாய் திரண்டுள்ளனர். வகுப்புகளை புறக்கணித்து விட்டு பேரணியாக திரண்டுள்ளனர்.
மாணவர்கள் பேரணி
தாம்பரம், சந்தோஷபுரம் மற்றும் சேலையூரில் மாணவர்கள் பேரணி மேற்கொண்டுள்ளனர். பேரணியில் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் தடையை நீக்க வலியுறுத்தியும் மாணவர்கள் பேரணி மேற்கொண்டுள்ளனர்.
திருத்தணி மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பேரணியாக சென்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இதே போல திருவண்ணாமலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாணவர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது ஊர்வலமாக செல்ல முயன்றததால் அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை, சேலம்
மதுரையில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே 2000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொன்னேரியில் கல்லூரி மாணவர்கள் 500 பேர் பேரணியாக சென்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அப்போது அவர்கள் முழக்கமிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரணியிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பேரணி
ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர். பொள்ளாச்சியில் அனைத்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பட்டதில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் முழக்கமிட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் தடையை நீக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் முழக்கமிட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாணவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை, திருவாரூர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டியில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை, கடலூரிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திணரும் அரசு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநில அரசு முக்கிய முடிவினை எடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்கள், மாணவர்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்குமா? போராட்டம் முடிவுக்கு வருமா?