ஹைட்ரோகார்பன் உட்பட விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் உறுதி
சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று 2வது நாளாக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றபோது, விவாதத்தை சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தொடங்கி வைத்து பேசினார். பல உறுப்பினர்களும் பேசினர். இததற்கு முதல்வர் எடப்பாபடி பழனிச்சாமி பதிலளித்தார்.
முதல்வர் பதிலுரையின்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், குறுக்கிட்டு சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பினார். முதல்வர் அளித்த பதிலுரை இதுதான்.
காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க செல்லும் பொதுமக்கள் கண்ணிய குறைவாக நடத்தப்படுகிறார்கள் என்று உறுப்பினர் ராமசாமி தெரிவித்தார். எந்த காவல் நிலையத்தில் இதுபோன்று நடந்தது என்று சொன்னால் சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விஷமிகள் தூண்டுகிறார்கள்
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றங்கள் குறைவு. முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத்தரப்படுகிறது. சில விஷமிகள் பொதுமக்களை தூண்டிவிடுவதால் போராட்டம் நடத்த சொல்கின்றனர். கதிராமங்கலம் பிரச்சினையை பொறுத்தவரை, அங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். ஆனால், இப்போது சமூக விரோதிகள் பொதுமக்களை தூண்டிவிட்டு அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
ஏற்க மாட்டோம்
விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. நாங்கள் மத்திய அரசு கூட்டணியில் இல்லை. திமுகதான் 16 ஆண்டு காலம் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். நான் பிரதமரை சந்தித்தபோது இந்த பிரச்சினை குறித்து அழுத்தம் கொடுத்தேன்.
பேஷனாகிவிட்டது
மத்தியில் எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தாலும், எங்களால் முடிந்த அளவுக்கு அழுத்தத்தை மத்திய அரசிடம் கொடுத்துள்ளோம். தமிழகத்தின் நலன் தொடர்ந்து காக்கப்பட்டு வருகிறது. சாமளாபுரம் போராட்டத்தை சில அமைப்புகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு எதிராக நடத்தின. போராட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வை மீட்டுக் கொண்டுவர போலீசார் முயன்றபோது தான், அந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. போராட்டம் நடத்துவது என்பது இப்போது பேஷனாகிவிட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கியதுடன் கொடுஞ்சொற்களாலும் பேசினார்கள். இந்த விஷயத்தில் காவல் துறை தன் கடமையை செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை நாங்களும் விரும்பவில்லை.
மணல் விற்பனை
இதற்கு முன்பு மணல் கொள்ளையடிக்கப்பட்டது. அரசு அதை தடுத்து, இப்போது அரசே மணல் குவாரிகளை திறந்துள்ளது. மொத்தம் 23 மணல் குவாரிகள் உள்ளன. அதற்கு முறையான சாலை வசதிகள் வேண்டும். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லோடு மணல் தேவை. தற்போது, ஒரு நாளைக்கு 7 ஆயிரம் லோடு மணல் வழங்கப்படுகிறது. மணல் திருட்டை முழுமையாக தடுக்கவே இந்த முறை பின்பற்றப்படுகிறது. தற்போது, ஆன்-லைன் மூலம் மணல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பல சீர்திருத்தங்களை கொண்டுவர உள்ளோம். அது வந்ததும், மணல் திருட்டு முழுமையாக தடுக்கப்படும். புதிதாக மணல் குவாரிகளும் திறக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.