கால் கடுக்க கியூவில் நின்று சிம் வாங்கிட்டாங்கல்ல.. தமிழகத்தில் ஜியோ கஸ்டமர்கள் எண்ணிக்கை தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு தமிழகத்தில் சுமார் 11 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 11 லட்சமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை கடந்த மாதம் 5ம் தேதி அதன் தலைவர் முகேஷ் அம்பானியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. 18000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களில் நெட்வொர்க் சேவையை வைத்துள்ளது ஜியோ.
இதில் குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் ஜியோ கொடி கட்டி பறக்கிறது. குஜராத்தில் 15 லட்சம் வாடிக்கையாளர்களும், ஆந்திராவில் 12 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
கடந்த மாத இறுதிக்குள்ளாக, நாடு முழுவதிலும் ஜியோவுக்கு 1 கோடியே 60 லட்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். தற்போதைய நிலையில் அது 2 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினசரி சுமார் 10 லட்சம் பேர் என்ற அளவில், ஜியோ சிம் கார்டுகளை வாங்கிவருவதாக அதன் தேசிய அளவிலான புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ சிம் வாங்க கால் கடுக்க கியூவில் நின்ற மாநிலங்களில் தமிழகம் முக்கியமானது. எனவேதான் இங்கு ஜியோ கஸ்டமர்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உள்ளது. பெரிய மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கூட தமிழகத்தைவிட குறைந்த ஜியோ வாடிக்கையாளர்கள்தான் உள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
கேரளாவில் ஜியோ சிம் வைத்துள்ளோர் எண்ணிக்கை 6 லட்சம் என்ற அளவில் உள்ளது. பஞ்சாப்பில் இந்த எண்ணிக்கை 8 லட்சம். மேற்கு வங்கத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் 5 லட்சம் என்ற அளவில்தான் உள்ளனர். குட்டி மாநிலமான அசாமில் 3 லட்சம் பேர் ஜியோ வாடிக்கையாளர்களாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் சுமார் 1 லட்சம் பேர் போன்களில் ஜியோ அலங்கரிக்கிறது.