டெங்கு.. போலி மருத்துவரிடம் போகாதீங்க... நீங்களா மருந்து வாங்கி சாப்பிடாதீங்க: அரசு அறிவுறுத்தல்
சென்னை: மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மருந்து வாங்கி உட்கொள்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மேலும் உரிய, தகுதியற்ற, போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''திருவள்ளூர் மாவட்டத்தில், காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மக்கள் மனதில் பீதியை ஒருசாரார் ஏற்படுத்தி வருகின்றனர். எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சலே. டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டாலே இறப்பு நேரிடும் என்பது ஒரு தவறான கருத்தாகும்.
உரிய நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்கத் தவறிய அசாதாரண ஒரு சதவீதத்திற்கும் குறைவான நிகழ்வுகளில் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனையும் முற்றிலுமாக தடுத்திட அரசு எண்ணற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலை மருந்து மாத்திரைகள் மூலமாக எளிதில் குணப்படுத்த இயலும்.
டெங்கு காய்ச்சல் 'ஏடிஸ்' வகை கொசுவினால் பரப்பப்படுகிறது. இந்த வகை கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் கொசுவாகும். பகல் பொழுதில் கடிக்கும் குணமுடையது. எனவே பொதுமக்கள் வீடு மற்றும் வீட்டிற்கு அருகில் தண்ணீரை தேக்கி வைத்துள்ள இடங்களை மூடி வைக்க வேண்டும்.
கூடுதல் களப்பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. கொசு மருந்து தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்பு புகை மருந்துகளை அடித்தல் மூலமாகவும் கொசுக்களை கட்டுப்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் எவ்வித பதட்டமுமின்றி அருகில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தையோ, மருத்துவமனையையோ அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையோ உடனடியாக அணுகி தகுந்த சிகிச்சையை உரிய நேரத்தில் பெற வேண்டும்.
மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மருந்து வாங்கி உட்கொள்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மேலும் உரிய, தகுதியற்ற, போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை கண்டறியும் உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் இருப்பை தமிழக அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
எனவே, காய்ச்சல் கண்டவுடன் பீதி அடையாமல் அரசு மருத்துவமனையை அணுகி தேவையான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.