பொங்கல் நாளில் பொது விடுமுறை இல்லையா? - அஞ்சல்துறை ஊழியர்கள் பணியைப் புறக்கணிக்க முடிவு
பொங்கல் பண்டிகை தினத்தன்று கட்டாய விடுமுறை தினம் இல்லை என்பதால் வரும் சனிக்கிழமை அன்று அஞ்சல்துறை ஊழியர்கள் பணியைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: பொங்கல் விடுமுறை தினம் பொதுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஊழியர்கள் நலக்குழு அதிகாரிகளே இதற்கு காரணம் என மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.
பொங்கல் திருநாள் விடுமுறையை, கட்டாயப் பொதுவிடுமுறைப் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டதாக வெளியான தகவல், தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது. இதற்கு அதிமுக, திமுக உட்பட பெரும்பான்மையான கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
17 விடுமுறை நாட்கள்
ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழுவில் உள்ள அதிகாரிகள் எடுத்த தவறான முடிவே இந்தக் குழப்பத்திற்கு காரணம் என, மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த துரைப்பாண்டியன், மொத்தம் 17 அரசு விடுமுறை நாட்களில், 3 நாட்களை மட்டும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழு முடிவு செய்யலாம் என தெரிவித்தார்.
தவறு எங்கே நடந்தது?
கடந்த ஆண்டுகளில், பொங்கல் திருநாள் வேலைநாட்களில் வரும் போது, அந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு, மத்திய அரசு ஊழியர்கள் நலக்குழு பரிந்துரைத்து வந்திருப்பதாக துரைப்பாண்டியன் கூறினார். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் தினம் சனிக்கிழமை வந்ததை அடுத்து, அன்று ஏற்கனவே விடுமுறை நாள் என்பதால், தனியாக அறிவிக்கத் தேவையில்லை என ஊழியர்நலக்குழு அதிகாரிகள் முடிவு செய்துவிட்டதாகவும் துரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு யாருக்கு?
அதிகாரிகள் கவனக்குறைவுடன் எடுத்த இந்த முடிவு, மத்திய அரசின் சேவைத்துறைகளான அஞ்சல், ரயில்வே மற்றும் பொது மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
பணியை புறக்கணிப்போம்
அதாவது, மத்திய அரசின் நிர்வாகத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சனிக்கிழமை விடுமுறை என்பதால் வேலைக்குச் செல்லத் தேவையில்லை என்றும், அஞ்சலகம், ரயில்வே போன்ற சேவைத்துறையைச் சேர்ந்தவர்கள், பொங்கல் திருநாளான அன்றைய தினம் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, சனிக்கிழமை அன்று அஞ்சல்துறை ஊழியர்கள் பணியைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் துரைப்பாண்டியன் தெரிவித்தார்.
பணி மறுப்பு போராட்டம்
இதேபோல தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளன செயலர் ராமமூர்த்தி, மத்திய அரசு ஊழியர்களுக்கான, பொங்கல் பண்டிகை விடுமுறை, கட்டாய விடுமுறையில் இருந்து, விருப்ப விடுமுறையாக மாற்றப்பட்டு உள்ளது சரியானதல்ல என்றார். மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 11ஆம் தேதி தமிழகம் முழுவதும், உணவு இடைவேளையின் போது, தபால் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர். 13ஆம் தேதி தலைமை தபால் அலுவலகம் முன், தொடர் முழக்க போராட்டம் நடக்கும். பொங்கலன்று பணி மறுப்பு போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.