தமிழ்நாட்டில் இருந்து மே.வங்கத்திற்கு ஹவாலா பணம் போவது ஏன்? வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது எப்படி?
சென்னை: சமீபத்தில், மேற்கு வங்கத்திலுள்ள, தமிழக தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.50 கோடி பணத்தை ஐ.டி. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது ஹவாலா பணம் என்று தெரியவந்துள்ளது. இந்த ஹவாலா பணம், மேற்கு வங்கம் வழியாக வங்கதேசம் சென்று அங்கிருந்து, அரபு நாடுகளுக்கு செல்வதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்களுக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் பெயருக்காவது சில தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதற்கு காரணம், கணக்கில் காட்டாத பணத்தை வங்கதேசத்துக்கு கடத்திச் செல்ல அந்த நிறுவனங்கள் உதவும் என்பதுதான்.
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, வங்கதேச நாட்டுக்கு எளிதில் பணத்தை கடத்த முடிகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு பணம் எளிதில் பரிமாறப்படுகிறது. துபாயிலுள்ள தாவூத் கும்பல் இந்த பணத்தை பெற்று ஐபிஎல் போன்ற விளையாட்டுகளின்போது சூதாட்டத்திற்கு பயன்படுத்துகிறது.
மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது.
தற்போது தமிழகத்தை சேர்ந்த லாட்டரி பிரமுகரும் இதே வழியில்தான் ஹவாலாவை கையாண்டுள்ளது, தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என்று தெரிகிறது. ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி பணம் இவ்வாறு துபாய் செல்கிறதாம்.
ஹவாலா பணத்தில் 70 விழுக்காடு கள்ள லாட்டரிகள் மூலம் சம்பாதிக்கப்படுவதுதானாம். சென்னையில் இருந்து மூட்டைகளில் பணத்தை கட்டி மேற்கு வங்கத்திற்கு அந்த தொழிலதிபர் அனுப்பி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.