தமிழ் புத்தாண்டும் விஷு கொண்டாட்டமும் : ஆலயங்களில் அலைமோதிய கூட்டம்
தமிழ் புத்தாண்டு தினம், விஷூ பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அலைமோதியது. சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னை: தமிழ்ப்புத்தாண்டு தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் மக்கள் அதிகாலை முதலே கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
கேரளாவில் விஷூ என்றும், ஒடிசாவில் மகா விஷுபா சங்கராந்தி என்றும் பண்டிகை நாளாக இன்று கொண்டாடுகின்றனர். மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பிறப்பை உற்சாகமாகக் கொண்டாடினர். சென்னையில் உள்ள மலையாள மக்கள் ஐயப்பன் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர்.
தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு திருநாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து வகையான பழங்கள் காய், கனிகள் உள்ளிட்ட பொருட்களை சுவாமிக்கு வைத்தும் அதில் நகைகள், புடவைகள், பணம் மற்றும் கொன்றைப் பூவை வைத்து வழிபடுவர்.
கனி காணுதல்
புத்தாண்டு பிறக்கும் போது வயதில் பெரியவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஓவ்வொருவராக கண்ணை மூடிக் கொண்டு அழைத்து வந்து புத்தாண்டு தினத்தன்று பழம், கனிகள், பணம் உள்ளிட்டவற்றை பார்க்க வைப்பார்கள். இதன் மூலம் வருடம் முழுவதும் இது போன்ற நல்ல பொருட்களையே பார்க்க வேண்டும் என்ற ஐதீகம்.
கோவில்களில் வழிபாடு
அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று ஏராளமானோர் வழிபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றனர்.
வடபழனி முருகன் கோவில்
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.
பக்தர்கள் கூட்டம்
மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஐயப்பன் கோவில்
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் வழிபாடு நடத்தினர். ஐயப்பன் கோவில், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதே போல எம்ஆர்சி நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மலையாள மொழி பேசும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வாழ்த்து கூறி உற்சாகம்
பாரம்பரிய உடை அணிந்து வந்த மலையாள மொழி மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். அங்கு வந்த பக்தர்களுக்கு ஒவ்வொருவருக்கும் சொர்ண அபிசேஷகம் செய்யப்பட்டு இருந்த ஒரு ரூபாய் சில்லறை காசுகள் கைநீட்டம் எனப்படும் சடங்கின்படி அன்பளிப்பாக வழங்கப்பட்டன.