இரும்பு திரைகளை உடைக்க ஆரம்பித்துள்ள தமிழ் நியூஸ் சேனல்கள்!
சென்னை: இதுவரை இருந்து வந்த பாரம்பரிய மீடியா தடைகளை அகற்றி, புது பாதையை தமிழ் நியூஸ் சேனல்கள் உருவாக்கி வருவது அவற்றின் சமீபத்திய சில நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது.
தமிழகத்தில் ஒரு சில பிரிண்ட் மீடியாக்களும், ஆன்லைன் மீடியாக்களும், காட்சி ஊடகங்களும் இருந்த நிலை மாறி, தற்போதைய அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிறைய காட்சி ஊடகங்களுக்கு கதவுகள் திறந்துவிடப்பட்டன.
அப்படி உருவானவைதான், புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ்7, பாலிமர் செய்திகள் போன்றவை. அதுவரை அரசியல் கட்சிகள் சார்புடையவையாக இருந்து வந்த செய்தி சேனல்களுக்கு மத்தியில் மேற்கண்ட சேனல்கள் வருகை தமிழக பார்வையாளர்களுக்கு புதிய ஒளிக்கீற்றாக தென்பட்டது.
பிற மாநிலங்களில் சுதந்திரம்
கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அரசியல் தலைவர்களை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்க ஊடகத்தாருக்கு சுதந்திரம் உள்ளது. முதல்வருடனே நேருக்கு நேர் வாதம் புரியவும் செய்தியாளர் சந்திப்புகளில் வாய்ப்பு உண்டு. ஆனால், தமிழகத்தில், தலைவர்கள் சொல்வதை எழுதிக்கொண்டு திரும்பிச் செல்லும் நிலையில்தான் பல ஊடகத்தார் இருந்தனர். ஆனால், அதை நடுநிலை சேனல்கள் மாற்ற உதவின.
உடனுக்குடன்
ஒரு தலைவர் கூறும் குற்றச்சாட்டை மறுத்து, மறு தலைவர் மறுநாள் அறிக்கைவிடும்வரை காத்திராமல், இரு துருவ அரசியல் கட்சி பிரமுகர்களையும் அருகருகே உட்கார வைத்து உடனுக்குடன் கருத்துகளை கேட்க இந்த நடுநிலை சேனல்களின் விவாத நிகழ்ச்சிகள் பெருமளவில் உதவுகின்றன.
மரபு மாற்றம்
இந்நிலையில்தான், தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றொருபடி தங்களை முன்னிருத்தி மரபுகளை உடைக்க ஆரம்பித்துள்ளன. அதற்கு ஆரம்ப அடி எடுத்து வைத்துள்ளன, புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ்7 சேனல்கள். தமிழக ஊடக வட்டாரத்தில் ஒரு மரபு காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதை கவனித்து பார்த்த பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள்.
பிற ஊடகமெனில் மூச்..
எந்த ஒரு ஊடகத்திற்கு பிரச்சினை என்றாலும், பிற ஊடகங்கள் அதில் தலையிடாது. இது ஒரு மரபாகவே பின்பற்றப்படுகிறது. மதுரையில் 'தினகரன்' பத்திரிகை எரிக்கப்பட்டு, 3 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போதுகூட, மற்றொரு முன்னணி பத்திரிகையில், மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு என்றுதான் செய்தி வெளியிட்டிருந்தது. எரிக்கப்பட்ட பத்திரிகை பெயரை போடவில்லை.
இரும்பு திரை
ஒரு ஊடக முதலாளிக்கோ அல்லது ஊழியருக்கோ எதிரான வழக்குகளின்போது கூட பிற ஊடகங்கள் அந்த செய்தியை வெளியிடாத நிலைதான் இருந்து வந்தது. நம்மீது வழக்கு ஏதேனும் வந்தால் பிற ஊடகங்கள் அதை தவிர்த்துவிடும் என்ற தற்காப்பு ஒருபக்கமெனில், பிற ஊடகத்திற்கு நம்மால் விளம்பரம் கிடைத்துவிடுமோ என்ற பார்வை மற்றொரு புறம். இவை இரண்டும் சேர்ந்து ஊடகங்களை இரும்பு திரைக்கு பின்னாலேயே வைத்திருந்தன.
தந்தி டிவிக்காக..
இந்த மரபை தற்போது சேனல்கள் உடைக்க ஆரம்பித்துள்ளன. உதாரணத்திற்கு, புதிய தலைமுறையின், நெருங்கிய போட்டியாளராக அறியப்படும் தந்தி டிவியை, புறக்கணிக்க திமுக முடிவு செய்தபோது, அதை தனது பிரைம் டைம் விவாத நிகழ்ச்சியான, 'நேர்பட பேசு' புரோக்ராமில், விவாதித்தது புதிய தலைமுறை. இப்படி ஒரு சேனலை புறக்கணிப்பது அந்த சேனலை நிர்பந்திக்கும் செயலாகாதா.. என்ற கேள்விகள் திமுக பங்கேற்பாளரிடம் சரமாரியாக முன்வைக்கப்பட்டன.
ஆனந்தவிகடனுக்காக..
இதேபோல, தமிழகத்தின் முன்னணி பத்திரிகை குழுமங்களின் ஒன்றான விகடனுக்கு எதிராக, தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நேற்று அதன் ஆசிரியர் திருமாவேலனை 'நேர்பட பேசு' விவாத நிகழ்ச்சிக்கு அழைத்து பங்கேற்க வைத்துள்ளது புதிய தலைமுறை. அதிமுக சார்பிலான பங்கேற்பாளரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், இரு தரப்பும் நேரடியாகவே, தங்களது மனத்தாங்கல்களை வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
உண்மைகள் உடைப்பு
தமிழக முன்னணி பத்திரிகையாளர்களில் ஒருவரான திருமாவேலனின், எழுத்துக்கள் தீவிர மொழியில் பேசியுள்ளதே தவிர, வெளியுலகத்திற்கு வந்து பேசியது மிக அரிது. ஆனால், கடந்த ஆட்சி காலத்தில், திமுகவையும், கருணாநிதியையும், தற்போது ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததைவிட மோசமாக விமர்சனம் செய்துள்ளோம் என்று வெளிப்படையாக பேச வைத்தது அந்த நிகழ்ச்சி.
வாயடைத்த அதிமுக
ஈழப் பிரச்சினையில் கருணாநிதியை எந்த அளவுக்கு மோசமான ஒரு வார்த்தை போட்டு வர்ணித்தோம் என்பதையும் திருமாவேலன் எடுத்துக்கூறினார். அதிமுக தரப்பால் குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் பேச முடியவில்லை.
திருந்தப்போவதில்லை
"திமுகவை குறை கூறும்போது, முரசொலியில் எங்களைப்பற்றி மோசமான கார்டூன்கள் வரையப்பட்டன. தற்போது அதிமுகவை விமர்சித்தால், அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. ஆக மொத்தத்தில், நீங்கள் இரு கட்சிகளும், உங்களை திருத்திக்கொள்ள முயலப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது" என்று கூறி விவாதத்திற்கு, திருமாவேலன் முற்றுப்புள்ளி வைத்தார்.
சுய விமர்சனம்
பிற ஊடகங்களின் மீதான தாக்குதல்களை தானாக முன்வந்து விவாதப்பொருளாக்கியதோடு, தன் மீதான சர்ச்சையையும் விவாதப்பொருளாக்கியிருந்தது, புதிய தலைமுறை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான, யுவராஜை, தனிப்பட்ட முறையில், புதிய தலைமுறை பேட்டியெடுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், நேர்பட பேசு நிகழ்ச்சியில் அதை விவாதப்பொருளாக்கி, சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்தது. புது டிரெண்ட். இந்த டிரெண்டியான விவாதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தியது, புதிய தலைமுறை நெறியாளர் குணசேகரன்தான். அவரது ஆளுமை, இந்த விவாதங்களுக்கு மெருகேற்றியது
தந்தி டிவியும் சுய விமர்சனம்
தந்தி டிவி செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ஒரு தலைபட்சமாக, அதிலும், இந்துத்துவாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக, திராவிடர் கழகம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூகதளங்களில் தகவல்களை பரப்பி வந்த நிலையில், திராவிடர் இயக்கத்தின் சீனியர்களில் ஒருவரான சுப.வீரபாண்டியனை வைத்து, தன்னைத்தானே கேள்வி கேட்க வைத்து பதிலளித்தார் பாண்டே.
நியூஸ் 7 இப்படி
நியூஸ்7 தொலைக்காட்சியை பொறுத்தளவில், தி ஹிந்து குழு தலைவரான என்.ராமை சிறப்பு பேட்டி எடுத்து, அவரது பத்திரிகை அனுபவங்களையும், தற்போதைய பத்திரிகை உலகின் நிலவரங்களையும் ஒளிபரப்பியது. பிற ஊடகத்தின் தலைவர் என்ற பாரபட்சம் அதில் காட்டப்படவில்லை.
ஆரோக்கியம்
இந்தபோக்கு, தமிழக மீடியா உலகில் புதிய பாதையை திறக்க வழிகோலும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள். மீடியாக்களில் நிகழும் தவறுகளை பிற மீடியாக்கள் அம்பலப்படுத்தவும், மீடியாக்கள் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டால் அதை தடுக்கவும் இந்த டிரெண்ட் பயன்படும் என்பது அவர்கள் பார்வையாக உள்ளளது.