'தட்ஸ் தமிழ்' சொன்னது நிஜமானது- திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்- வைகோ மீது திருமா அதிருப்தி!
சென்னை: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என வைகோ அறிவித்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிருப்தி அடைந்திருப்பதாக முதலில் நமது ஒன் இந்தியா தமிழ் (தட்ஸ்தமிழ்) இணையதளம்தான் கூறியது. தற்போது திருமாவளவனும் இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மீண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாத நிலையில் திமுக இதனை நடத்த வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்தவர் திருமாவளவன். தற்போது திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளது.
இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. திமுக பொருளாளர் முக ஸ்டாலின் அனைத்து அரசியல் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
ஆனால் திமுக நடத்துவது அரசியல் ஆதாயத்துக்குதான்; அதில் பங்கேற்கமாட்டோம் என பாஜக கூறியுள்ளது. இதேபோல் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளரான வைகோ தெரிவித்திருந்தார்.
வைகோவின் இந்த அறிவிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்தது. வைகோவின் இந்த முடிவால் திருமாவளவன் அதிருப்தி அடைந்திருந்தார். இதை ஒன் இந்தியா தமிழ் இணையதளம்தான் முதலில் செய்தியாக வெளியிட்டது.
தற்போது இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார் திருமாவளவன். திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக வைகோ அறிவித்த முடிவை மீளாய்வு செய்வதற்காக மீண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசுவேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திருமாவளவன்.