திமுக-பாஜக கூட்டணியா?ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பும்.. ஸ்டாலின் சொன்ன பதிலும்.. தமிழிசையின் கருத்தும்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுகவும் பாஜகவும் ஓரணியில் சேர்ந்து சந்திக்க எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும், பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்தல் கூட்டணி பற்றிய யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறியுள்ளார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக உடன் பாஜக, தேமுதிக கட்சிகள் இணைந்து கூட்டணி உருவாகலாம் என்று டுவிட்டரில் கொளுத்திப் போட்டார் சுப்ரமணிய சுவாமி. இது தமிழக அரசியலில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக தேர்தல் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், இது தொடர்பாக பேச டெல்லியில் இருந்து குலாம் நபி ஆசாத் இன்னும் சில தினங்களில் சென்னைக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பலவிதமான தகவல்கள் பரவின.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆன்மீகத் தலைவர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர். தேர்தல் நேரத்தில் ஸ்டாலினை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தது திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. இது பாஜக - திமுக கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என தகவல் வெளியானது.
பாஜக உடன் கூட்டணியில்லை
இது குறித்து விளக்கமளித்த ஸ்டாலின், தமிழக சட்டசபைத் தேர்தலை திமுகவும் பாஜகவும் ஓரணியில் சேர்ந்து சந்திக்க எவ்வித வாப்பும் இல்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
யாரெல்லாம் எங்களை அரசியலில் தீண்டத்தகாதவர்கள் போல் பாவித்தார்களோ அவர்களெல்லாம் எங்களை நோக்கி படையெடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் விருப்பம் இருப்பதாக பாஜகவிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வரவில்லை என்றும் கூறினார்.
நமக்கு நாமே பயணத்திற்கு பாராட்டு
'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை பெங்களூருவில் ஒரு முறை நான் சந்தித்தேன். அப்போதே அவர் சொல்லியிருந்தார் சென்னை வந்தால் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று. அதனடிப்படையிலேயே நேற்றைய சந்திப்பு நிகழ்ந்தது. நான் மேற்கொண்டுள்ள நமக்கு நாமே பயணத்தை அவர் பாராட்டினார். மேலும், டெல்லியில் மார்ச் 11, 12 தேதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், அந்நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாதது குறித்து அவரிடம் விளக்கினேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழிசை பதில்
பாஜக உடனான கூட்டணி பற்றி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நாங்கள் யாருடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றும் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
வரட்டும் பேசட்டும் சொல்கிறோம்
இதனிடையே தமிழிசையின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன ஸ்டாலின், நாங்கள் பாஜக உடன் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சும் நடத்தவில்லை என்றவர், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வரட்டும்...பேசட்டும்... செய்தியாளர்களை அழைத்து சொல்கிறோம் என்றார். அதுவரை யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றார்.