விஜயகாந்தைச் சந்தித்தார் தமிழிசை... இடைத்தேர்தல் கூட்டணி குறித்து முதல்கட்ட ஆலோசனை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. இந்த சந்திப்பின் போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டன.
அதிமுக சார்பில் ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிடுகிறார். சமூக சேவகர் டிராபிக் ராமசாமி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்று பொது வேட்பாளராக களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக மற்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டு வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழிசை, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப் படும். இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்' என்றார்.