அரசியல் ஆதாயத்துக்காகவே திமுகவின் அனைத்து கட்சி கூட்டம்- தமிழிசை சவுந்தரராஜன் விளாசல்
கோவை: அரசியல் ஆதாயத்துக்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
பொது சிவில் சட்டம் என்பது பெண்களின் உரிமையைப் பாதுகாக்கவே கொண்டு வரப்படுகிறது. இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து தரும் முத்தலாக் முறையானது பெண்கள் உரிமைக்கு எதிரானது. பெண்கள் உரிமை பற்றி பேசுவோ இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன்?
காவிரி பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டுவதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயத்துக்காகவே அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பதிலாக திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூலம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து காவிரி நீரை திறந்துவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 3 தொகுதி தேர்தல்களை புறக்கணிப்பதாக மக்கள் நலக் கூட்டணி அறிவித்துள்ளது. மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது எனக் கூறும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேர்தலில் களமிறங்க அச்சப்படுவது ஏன்?
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.