தனது படங்களுக்கு பிரச்சினை வராத வகையில் சாமர்த்தியாக பேசியுள்ளார் ரஜினி - தமிழிசை
சென்னை: தனது படங்களுக்கு யார் மூலமும் பிரச்சினை வந்து விடாத வகையில் சாமர்த்தியமாக பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சுக்கள் பெரும் சலலசப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அவர் வசதிக்கேற்ப பேசிக் கொண்டிருக்கிறார், செயல்படுகிறார் என்ற சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
தனது புதிய படத்திற்குப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவர் இவ்வாறு பேசி வருவதாகவும் சலசலப்பு கிளம்பியுள்ளது. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல அமைந்துள்ளது தமிழிசையின் பேட்டி. இதுகுறித்து தனியார் டிவிக்கு தமிழிசை அளித்த பேட்டியிலிருந்து:
ரஜினியை வரவேற்போம்
சகோதரர் ரஜனிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். அரசியலிலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருப்பவர். ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவரது பேச்சு எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு காரணம் யதார்த்தமான நிலைமையை வெளிப்படுத்துவார். ஆனால் இன்று அவரது பேச்சு முரண்பாடாகவே அமைந்து இருக்கிறது.
திமுகவைப் பாராட்டியிருப்பது புரியலையே!
அரசியல் அமைப்பு கெட்டு போய் விட்டது. ஜனநாயகம் கெட்டு விட்டு என்று தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அதே நேரத்தில் இன்றைய அரசியலில் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி திமுகவை பாராட்டி இருப்பது வியப்பாக இருக்கிறது.
ஸ்டாலின் குடும்பம்தானே ஆட்சி செய்தது
மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பமும் தானே இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழக அரசியல் கெட்டுப் போவதற்கு அவர்களும் ஒரு காரணம் தானே? மாற்றம் வர வேண்டும் என்று எதிர் பார்க்கும் ரஜினி மீண்டும் ஏமாற்றத்தை அங்கீகரிப்பது முரண்பாடாக தெரிகிறது.
அன்புமணி, திருமாவளவன் யார்
பாமகவின் அன்புமணி ராமதாசை பாராட்டி இருக்கிறார். அவரது நிர்வாகத்தில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. அன்புமணி மீதும் வழக்கு இருக்கிறது. திருமாவளவன் தலித்துகளுக்காக பாடுபடுபவர், சீமான் மிகச்சிறந்த பேராளி என்று பாராட்டி இருக்கிறார். இவர்களின் அரசியல் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் சாதிய பின்புலத்தில் அரசியல் நடத்துபவர்கள்.
மோடி கண்ணில் தெரியவில்லையா
நாட்டில் புரையோடிப் போன ஊழலை ஒழித்து நிர்வாக சீர்கேட்டை சீர்படுத்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார். நடைமுறை சிக்கல்களை தீர்த்து நாட்டை நல்ல பாதையில் வழி நடத்த பாடுபடும் மோடியை அவர் முதலில் பாராட்டி இருக்கலாம். மோடியின் நிர்வாகமும், செயல்பாடும் ரஜினிக்கு தெரியாததல்ல.
மோடியைப் பாராட்ட தயக்கம் ஏன்?
சிஸ்டத்தில் மாற்றம் வர வேண்டும் என்று ரஜினி எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிகழ்த்தி வரும் மோடியை அவர் பாராட்டி இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவரை பாராட்ட தயங்கியது ஏன்? 44 ஆண்டுகளாக தமிழக கலைத்துறையில் இருப்பவர். தமிழக மக்களால் வளர்ந்தவர். கலைத்துறையில் இருந்து செய்ய முடியாததை அரசியலுக்கு வந்து செய்வார் என்று நம்புவோம்.
சமாளிக்கும் வகையில் பேசுகிறார்
நடிகர்கள் நாட்டை ஆளக் கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்பது பாமக. ஒரு காலத்தில் ரஜினியின் படம் ஓட முடியாத சூழ்நிலை கூட உருவானது. வருங்காலங்களில் தனது படத்துக்கு எதிர்ப்புகள் எந்த மூலையில் இருந்தும் வரக்கூடாது என்பதை சரியாக சமாளிக்கும் வகையிலேயே பேசி இருக்கிறார். பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார் தமிழிசை.