ஜெயலலிதா படத்தை சட்டசபையில் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது? தமிழிசை
சட்டசபையில் ஜெயலலிதா படத்தை வைப்பதில் எந்த தவறும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்பதில் எந்த தவறும் இல்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி மையம் இன்று சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டது.
இந்த மையத்தை மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திராஜன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திராஜன், மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை சிறுபான்மையினருக்கு எதிரானது இல்லை என தெரிவித்தார். மேலும் இச்சட்டம்
விவசாயிகளை பாதுகாக்கும் எனவும் தெரிவித்தார். இச்சட்டத்தை அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் எதிர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாஜகவை வலுப்படுத்தும் விதமாக 15 நாட்கள் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அதன்படி 3ம் தேதி பண்டாரு தாத்ரேயாவும் 5ம் தேதி உ.பி. துணை முதல்வரும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வரும் 9 தேதி சென்னையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் வைப்பதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.