அதிமுக ஆட்சி நிலைகுலைய கூடாது கவலைப்படுகிறார் ஸ்டாலின் - தமிழிசை பாய்ச்சல்!
திமுக செயல்தலைவர் பாஜக மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாஜகவின் மீது வெறுப்பையும், அதிமுகவின் மீது விருப்பையும் காட்டும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தனக்கு மட்டுமல்ல திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசின் நடவடிக்கைகளை முடக்க மத்திய அரசு, சிபிஐ வருமானவரித்துறை ஆகிய துறைகளை பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் செலக்ட்டிவ் ரெய்டு - செலக்ட்டிவ் கைது உள்ளிட்டவற்றின் பின்னனியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.வின் கை மறைவாகக் கூட அல்ல- வெளிப்படையாகத் தெரிகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
திராவிட உணர்வு ஊறிய தமிழக மண்ணில் பா.ஜ.க.வை வளர்க்கும் வீண் முயற்சிக்காக, அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபடாமல், தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுகவின் ஆட்சி நிலைகுலையக் கூடாது என்று ஸ்டாலின் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார் என்பது தனக்கு மட்டுமின்றி, திமுகவினருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். நேரடி எதிர்க்கட்சியான அதிமுகவை ஆதரிப்பதற்கும், தேசிய கட்சியான பாஜகவை எதிர்ப்பதும் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்ழுடுத்தியுள்ளதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு மீது ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக சாடிய தமிழிசை, விவசாயிகளுக்கான பயிர்க்கடன் மத்திய அரசின் உதவியோடே வழங்கப்பட்டுள்ளதாக முதல்வரே கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். சுய அரசியல் லாபத்திற்காக நாமெல்லாம் தமிழகத்தில் எந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று ஸ்டாலின் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றார் தமிழிசை.
தமிழகத்தில் நிச்சயம் பாஜக காலூன்றும் என்றும் அது பின்வாசல் வழியாக இருக்காது என்றும் தமிழிசை கூறினார். ஸ்டாலின் தங்களது செயலற்ற திறமையை பாஜகவை குற்றம் காண்பதன் மூலம் எந்தவித அரசியல் லாபத்தையும் பெறப் போவதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். ஊழலற்ற அரசை மத்தியில் உள்ள பாஜக நடத்திவருவதாகவும், வருமான வரித்துறை, டெல்லி போலீஸ், அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகள் அனைத்தும் எந்த தலையீடும் இல்லாமல் ஆதாரங்கள் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொண்ட வருவதாக கூறினார்.