தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தராஜன் மீண்டும் தேர்வு
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு அவர் பொறுப்பில் இருப்பார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் விதிகளின்படி கிளை கமிட்டி முதல் அகில இந்திய தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். 2009, 2012-ல் நடந்த தேர்தல்களில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மக் களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மத்திய அமைச்சர் ஆனதால் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைவரை நியமிப்பதா? அல்லது தமிழிசையின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பதா? என்று கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தியது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பாரதிய ஜனதாவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. பாஜகவின் ஹெச். ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரது பெயர்களும் புதிய தலைவர் பதவிக்கு அடிபட்டு வந்தன
இந்நிலையில் தற்போதைய தலைவர் தமிழிசை சவுந்தரராஜனே மீண்டும் தலைவராக நீடிப்பார் என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று அறிவித்தார். தமிழிசை சவுந்தரராஜன் 3 ஆண்டுகாலம் தலைவர் பதவியில் நீடிப்பார் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு மாநிலத் தலைவரை மாற்றினால் தேவை யில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் தமிழிசை சவுந்தரராஜனே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்பதால் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து 2014 தேர்தலைப்போல 3-வது அணியை உருவாக்க வேண்டும் என நேற்று கேரளா சென்ற பாஜக தலைவர்களிடம் அமித்ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.