கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன்
நடிகர் கமல்ஹாசனுக்கு திடீர் ஞானோதயம் வருவது ஏன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுள்ளார்.
கோவை: அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கமலின் அரசியல் டுவிட்டுகளை கடுமையாக விமர்சித்தார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன சேவை செய்தார்கள்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்?
திரைத்துறையில் இருந்தாலும் ரஜினி போல சமூக கருத்துகளை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ரஜினிகாந்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துகளை பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக சமூக பிரச்சினைகளை பேசாமல் தற்போது பேசுவது ஏன்? என்று தெரியவில்லை.
ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. அப்போதெல்லாம் கமல்ஹாசன் எவ்வளவு குரல் கொடுத்தார்? அவர் இப்போது திடீரென்று அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?. சினிமா போல நினைத்துக் கொண்டு ஒருநாள் முதல்வர் ஆகலாம் என்ற கதை அல்ல. அரசியல் என்பது டுவிட்டர் தளத்தில் இல்லை. அது மக்களுடன் நிஜ தளத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட கூடியவையாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோத அமைப்புகள் கலந்திருக்கின்றன. மாணவர் சமுதாயத்திற்குள் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் கலந்து விடக்கூடாது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
ஹிந்தி படத்தில் நடிக்கலையா?
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று காலையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கமல் இந்தி படத்தில் நடித்தவர்தானே, அதை வைத்து ஆதாயம் ஈட்டியவர்தான். இந்தி எதிர்ப்பிற்காக குரல் கொடுத்தேன் என்று கூறுவது ஏன் என்று கேட்டர். கமல்ஹாசன் இப்போது புனிதமடைந்து விட்டதாக பேசக்கூடாது. யாராக இருந்தாலும் இணைய தளத்தில் பேசக்கூடாது களத்திற்கு வரட்டும், களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் தமிழிசை கூறினார்.