மெட்ரோ ரயில் திட்டத்தில் பாஜகவிற்கும் பங்குண்டு - ரயில் பயணத்தில் தமிழிசை பேட்டி!
சென்னை: சென்னையில் ஆலந்தூர்- கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்சேவை கடந்த மாதம் 29 ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மெட்ரோ ரயிலில் பயணித்த நிலையில் இன்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.
பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மெட்ரோ ரயிலில் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளது. ஆனால், தமிழக அரசு கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்ட.த்தை கொண்டு வந்ததில் பா.ஜ.கவிற்கும் பெரும் பங்கு உண்டு
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூபாய் 40 பயணக் கட்டணம் என்பது மிக அதிகம். சாதாரண மக்களால் பயணம் செய்ய முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதில் மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
திட்டங்கள் வரும் போது அதற்கு உரிமை கொண்டாடும் மாநில அரசு பொறுப்பு என்று வரும்போது மத்திய அரசு என்று கூறுவது ஏற்புடையதல்ல. அப்படியானால் திட்டத்தையே மத்திய அரசு திட்டம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.