ஓபிஎஸும் எடப்பாடியும் இணைய வேண்டும்.. தமிழிசையின் திடீர் ஆசை!
காஞ்சிபுரம்: ஓபிஎஸும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைய வேண்டுட் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விருப்பம் தெரிவித்துள்ளார். அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இதற்கெல்லாம் பாஜக தான் காரணம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதிமுகவை உடைத்து அதன்மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சிப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்று அவர் கூறினார்.
மேலும் அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் அவர் கூறினார். மேலும் வரும் 25ஆம் தேதி ஸ்டாலின் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தால் எந்தப்பயனும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.