ஜனாதிபதி தேர்தல் நடப்பதால்… ஜூலை 17 ல் தமிழக சட்டசபை கூட்டம் நடக்காது.. சபாநாயகர் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூலை 17ம் தேதி நடக்கவிருந்த தமிழக சட்டசபை கூட்டம் நடக்காது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை : ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏக்கள் ஓட்டளிக்க இருப்பதால், ஜூலை 17 அன்று தமிழக சட்டசபைக் கூட்டம் நடைபெறாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை 19 வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், ஜூலை 17 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முன்கூட்டியே ஜூலை 8 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இதற்கான பதிலுரை ஜூலை 8 ம் தேதி காலை இடம்பெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர நிகழ்ச்சி நிரலில் வேறு மாற்றம் இல்லை என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.