ஓ.பி.எஸ் தலைமையில் ஒரே நாளில் இருமுறை கேபினட் கூட்டம்.. ஜிஎஸ்டி பற்றி ஆலோசித்தார்களாம்
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை: ஜெயலலிதா உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவு புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து 13 பக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்று முடிந்தது.
இதன்பிறகு, மதியம், 1.15 மணியளவில் மீண்டும் அமைச்சரவை கூடியது. மாலை 4 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.இக்கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி மசோதா குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சரவைக் கூட்டரங்கில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.