இலங்கை சிறையில் இருக்கும் 60 மீனவர்களை விடுவியுங்கள்... பிரதமருக்கு எடப்பாடியார் கடிதம்!
இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 60 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை சிறையில் உள்ள 60 மீனவர்களை விடுவிக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கியும் கைது செய்தும் வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவான பாரம்பரிய மீன்பிடி பகுதியில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள் எனக் கூறி கைது செய்து அவர்களுக்கு ரூ.2 முதல் ரூ 20 கோடி வரைக்கும் அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 60 மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர். இவர்களை மீட்டுத் தர வேண்டும் என அவர்களது குடும்பத்தார் முதல்வருக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 60 மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாகவே மத்திய வெளியுறவுத்துறை, வேறுநாடுகளில் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்தியர்களை எப்படியாவது மீட்டுக்கொண்டு வந்து விடுகிறது. ஆனால், தமிழக மீனவர்களை மீட்பது குறித்து தயக்கம் காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.