ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. டி.டி.வி.தினகரனும் உடனிருந்தார்
நேற்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இன்று ஆளுநரை முதல்வர் சந்தித்து அதுகுறித்து முறைப்படி தெரிவித்தார்.
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டு, கடும் அமளிக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பழனிசாமி வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் பழனிசாமி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
நேற்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இன்று ஆளுநரை முதல்வர் சந்தித்து அதுகுறித்து முறைப்படி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோரும், அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் உடனிருந்தனர்.