ராமேஸ்வரம் கடல் அலை அமைதியாக இருந்தாலும், மீனவர் வாழ்வில் அமைதியில்லை - ஈபிஎஸ் உருக்கம்!
ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழவில்லை என்று முதல்வர் பழனிசாமி உருக்கமாக பேசியுள்ளார்.
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் உள்ள கடல் அலைகள் அமைதியாக இருந்தாலும் மீனவர்கள் வாழ்வில் அமைதியில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் அப்துல் கலாம் மணி மண்டப திறப்பு விழாவில் முதல்வர் பானிசாமி பேசினார். அப்போது அவர், பாக் வளைகுடாவை ஒட்டி தமிழகத்தின் 5 கடலோர மாவட்டங்களில் உள்ள 305 மீனவ கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்றார்.
தமிழ்நாடு பாக் வளைகுடா தொடர்ந்து சந்தித்து வரும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவு மீட்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, இழுவலை மீன்பிடிப்பை ஆழ்கடல் மீன்பிடிப்பு செவில்வலை மீன்பிடிப்பு திட்டமாக மாற்ற ஆயிரத்து 520 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன் வைத்தார்.
இதே கோரிக்கையை நானும் பிரதமரிடம் வலியுறுத்தினேன், இதன் விளைவாக மத்திய அரசு 11.5.2017 அன்று 750 இழுவைப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் செவில்வலை படகுகளாக மாற்ற சிறப்பு நிதியுதவியாக ரூ. 100 கோடி, நீலப்புரட்சி திட்டம் சார்பாக ரூ.100 கோடி என 50 விழுக்காடு பங்களிப்பாக மொத்தம் ரூ.200 கோடி அளித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.86 கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக 500 இழுவலைப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்பு செவில்வலை படகுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 2 ஆயிரம் இழுவை வலைப் படகுகள் 3 கட்டங்களில் மாற்றி பரவலாக்கப்படும்.
பாக் வளைகுடா மீன்பிடிப்பை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 75 தமிழக மீனவர்களையும், 149 படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.