ரூ467 கோடி பழைய நோட்டுகள் மாற்றிய விவகாரம்: தமிழகத்தின் 10 கூட்டுறவு வங்கிகளுக்கு குறி!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது விதிகளுக்கு புறம்பாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய விவகாரத்தில் தமிழகத்தின் 10 கூட்டுறவு வங்கிகள் வருமானவரி கண்காணிப்பிற்குள் வந்துள்ளன.
சென்னை : ரூ. 467 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுக்களை மாற்றிய விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 கூட்டுறவு வங்கிகள் வருமானவரித்துறை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன.
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவித்தார். இதனையடுத்து நவம்பர் 10ம் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து பலரும் வங்கிகளில் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தனர்.
கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது பணம் டெபாசிட் செய்பவர்கள் வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள 382 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 41 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஒரே நாளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தது வருமான வரித்துறை கவனத்திற்கு வந்தது.
ரூ.150 கோடி பரிமாற்றம் ?
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் போலியாக ஏராளமான கணக்குகள் தொடங்கியது வருமான வரி சோதனையில் அம்பலமானது. இந்த கணக்குகள் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என வருமானவரித் துறை சந்தேகித்தது.
கடலூரிலும் முறைகேடு
இதே போன்று கடலூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலும் போலி கணக்குகள் தொடங்கி பணம் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்புப் பணத்தை போலி கணக்குகள் மூலமும், ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களையும் பயன்படுத்தி இந்த மோசடியை செய்ததாக கருதப்பட்டது.
நிபந்தனையுடன் அனுமதி
இதனால் தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பாரத ரிசர்வ் வங்கி தொடக்கத்தில் அனுமதி வழங்கவில்லை. நீதிமன்ற தலையீட்டினை அடுத்து, புதிய கணக்குகள் திறக்க அனுமதிக்க கூடாது, உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் மாற்ற அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், முறைகேடாக, தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் சுமார் 467 கோடி ரூபாய் அளவுக்கு ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நபார்டு வங்கியின் ஆதாரம்
மத்திய கூட்டுறவு வங்கிகள் தாங்கள் மாற்றிய பழைய நோட்டுக்களை நபார்டு வங்கியிடம் ஒப்படைத்தபோது போது மாற்றப்பட்ட மொத்த ரூபாயின் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே, கடந்த டிசம்பர் மாதம் சேலம், கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை வளையத்தில்
அந்த சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பலகோடி ரூபாய் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. நபார்டு வங்கியின் அறிக்கையை ஆதாரமாக வைத்து தற்போது வருமானவரித்துறை தமிழகத்தில் உள்ள 10 மத்திய கூட்டுறவு சங்கங்களை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது.