தினகரனை சந்திக்கப் போய் தனக்குத் தானே "ஆப்பை" தேடிக் கொண்ட விஜயதரணி!
காங்கிரஸ் கட்சியில் எப்போதும் ஓங்கி நிற்கும் விஜயதரணியின் குரலை ஒடுக்க நினைத்தவர்களுக்கு தினகரனை சந்தித்ததன் மூலம் தானே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் விஜயதரணி.
சென்னை : காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணியை ஓரம்கட்டவேண்டும் என்று நினைத்து வெறும் வாயை மென்றவர்களின் வாய்க்கு அவலை கொடுத்துள்ளார் விஜயதரணி. அண்மையில் தினகரனுடனான அவரின் சந்திப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2011, 2016ம் ஆண்டு என்று கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. சட்டப்பேரவையில் ஜெயலலிதா போல அதாவது சசிகலா கட்சிப்பொறுப்பேற்றஉடன் வந்த ஆடை வடிவமைப்பில் சட்டசபைக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
காங்கிரஸ் சட்டமன்ற கொறடா இருந்த போதே மீடியாக்களுக்கு பேட்டியளித்ததோடு விவாதங்களிலும் பங்கேற்று பிரபலத்தை தேடிக்கொண்டார் விஜயதரணி. விஜயதரணியின் நடவடிக்கையை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தனர் கன்னியாகுமரி மாவட்ட எம்எல்ஏக்கள்.
நீண்ட கால ஆதங்கம்
எனினும் தனக்கு இருந்த செல்வாக்கால் விஜயதரணி மீது கட்சியினர் கொடுத்த புகார்கள் தூசு படிந்தே கிடந்தன. சத்தியமூர்த்திபவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கும், விஜயதரணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
கண்டித்த மேலிடம்
இந்த விவகாரத்தில் விஜயதரணி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ஆத்திரமடைந்த கட்சி மேலிடம் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் பிரிவுத்தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. காவல்நிலையத்தில் அளித்த புகாரை திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டதாக அப்போது கூறப்பட்டது.
தினகரனுடன் கைகுலுக்கல்
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் விஜயதரணி, சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.டி.வி.தினகரனை திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, டி.டிவி.தினகரன் உடனான சந்திப்பு முற்றிலும் அரசியல் ரீதியானது அல்ல. தினகரனின் மாமியார் சமீபத்தில் காலமானார். அவரது மாமியாரின் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்கவே வந்தேன்.
அதிமுகவிற்காக பரிஞ்சு பேசியதால் சர்ச்சை
பா.ஜ.க. செயலை கண்டிக்காவிடில் அதிமுக நிலைக்காது. தமிழக ஆளும்கட்சியின் சுதந்திரத்தை பா.ஜ.க. பறித்துள்ளது. கட்சியை வழிநடத்தக் கூடிய தலைமையாக தினகரன் விளங்குவார். இதனால் தினகரனை முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது தான் சான்ஸ்
ஏற்கனவே விஜயதரணி மீது குற்றம் தேடி வரும் சக கட்சிக்காரர்களுக்கு இந்த விஷயம் அல்வா போல கிடைத்துள்ளது. எனவே இது குறித்து கட்சி மேலிடத்திடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
புகார் பட்டியல் வாசிப்பு
காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு, நமது கூட்டணியில் இல்லாத கட்சியை எதற்காக சந்திக்க வேண்டும் என்று புகார் மடல் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விஜயதரணி எந்த கட்சியின் எம்எல்ஏ என்பது கூட தெரியாமல் அதிமுக இணைய வேண்டும் என்று பகிரங்கமாக பேட்டியளித்தது குறித்தும் புகார் கூறப்பட்டுள்ளது.
விரைவில் நடவடிக்கை
எனவே கட்சி மேலிடம் எந்த நடவடிக்கைய எடுக்கப் போகிறது என்று காத்திருக்கின்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் கட்சி நாளை நடைபெற உள்ள குஜராத் ராஜ்யசபா தேர்தல் குறித்த பரபரப்பில் இருப்பதால் அதற்கு பின்னர் விஜயதரணி மீதான நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.