புதுச்சேரிக்கு காவிரி தண்ணீர் தராமல் தமிழம் வஞ்சிக்கிறது: நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்காமல் புதுச்சேரி மாநிலத்தை தமிழகம் வஞ்சிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி (ஏர்போர்ட் பேட்டி புகழ்) குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள புவனேஷ்வரி அம்மன் கோயிலில் நடக்கும் சண்டி யாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி (காங்கிரஸ்) வருகை தந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மோடிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டளையை ஏற்காவிட்டால் நரேந்திர மோடியை தூக்கி எறிகின்ற சக்தி ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு உண்டு. எனவே மத்திய அரசு இடஒதுக்கீடை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராடுவதோடு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தும்.
மத்திய அரசின் தவறான பாதையால் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. தற்போது இந்தியாவில் வியாபாரிகள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அளித்த வாக்குறுதிகளை தற்போது அவர் நிறைவேற்றவில்லை. மோடியின் முகத்திரை மக்கள் மத்தியில கொஞ்சம் கொஞ்கமாக கிழிந்து கொண்டு வருகிறது. மத்திய அரசு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவருடைய மகன் கார்த்திசிதம்பரத்தின் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
கர்நாடகவில் காங்கிரஸ் அரசு உள்ளது. இருப்பினும் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கொடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வந்தால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட விவசாயிகளும் பயன்பெறுவர்.
கர்நாடகா அரசு அங்கு மழை இல்லாதால் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது என்று கூறும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. இடைக்கால ஒப்பந்தத்தின் படி 75 டிஎம்சி தண்ணிரை தமிழகத்திற்கு கர்நாடகா அரசு கொடுக்க வேணடும். அதே போன்று தமிழகம் புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய 9 டிம்சி தண்ணீரை வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தை தமிழகமும் ஏமாற்றுகிறது. கர்நாடகாவும் வஞ்சிக்கிறது. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணிர் வந்தாலும் தமிழகம் புதுச்சோரிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்குவது கிடையாது. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.