சவுதிஅரேபிய கடல் பகுதியில் கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர் சுட்டு கொலை!
நாகர்கோவில்: சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் ஒருவர் கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொழிக்கரை என்ற மீன கிராமத்தை சேர்ந்தவர் மதிவளன் (45). இவரும் பொழிக்கரை மற்றும் மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் சவுதிஅரேபியாவுக்கு மீன்பிடிப்பதற்காக கடந்த 3ம் தேதி புறப்பட்டு சென்றனர்.
அங்கு அவர்கள் தங்கி விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்தனர். இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் சவுதி அரேபிய கடல் எல்லைக்குள் வந்த கடல் கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் படகில் இருந்த பொருட்களையும், மீன்களையும் கொள்ளைடிக்க முயன்றனர். அப்போது, மதிவளன் அதனை தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் மதிவளனை கடற்கொள்ளையர்கள் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் மதிவளன் கழுத்தில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்கள். சக மீனவர்கள் உதவியுடன் மதிவளன் உடலை, இன்று காலை சவுதிஅரேபியா கொண்டு சென்று, அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மதிவளனுக்கு மேரி என்ற மனைவியும், ஆனந்தன் ஜெரிட்டா என்ற மகனும், ஆன்சள் ஜெரிஸ்சா என்ற மகளும் உள்ளனர்.
மதிவளனின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்பது அந்த குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது. தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.