தஞ்சாவூரு மண்ணு எடுத்து.. அக். 1ல் தொடங்கும் கொலு.. அணிவகுக்கும் வண்ண வண்ண பொம்மைகள்!
சென்னை: தமிழகத்தில் நவராத்திரி விழா இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பொம்மை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவையொட்டி வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடுவார்கள். இதற்காக கடைகளில் விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நவராத்திரி பண்டிகையாகவும், கர்நாடக மாநிலத்தில் தசரா விழாவாகவும், மேற்கு வங்கம், பீகார், டெல்லி மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் துர்கா பூஜையாகவும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின்போது துர்கை சிலைகளை பல்வேறு உருவங்களில் தயாரித்து, ஸ்தாபிதம் செய்து பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். இதன் பின்னர், விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதுபோல், துர்கை அன்னையின் சிலைகளை ஆறுகள், குளங்கள் மற்றும் கடலில் கரைப்பார்கள்.
நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் புதூர் அருகே புறவழிச்சாலையோரம் கொலு பொம்மைகள் தயாரிப்பு பணிகள் களை கட்டியுள்ளன. புதூர் - பந்தல்குடி புறவழிச்சாலை பகுதியில் பிகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநில கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் முகாமிட்டு கண்கவர் வடிவங்களில் சுவாமி சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
கண்கவர் சிலைகள்
விநாயகர், முருகன், ஐயப்பன், கண்ணன், கிருஷ்ணன், ராமனின் பத்து அவதாரங்கள், அறுபடை வீடுகளில் முருக பெருமானின் திருக்கோலங்கள், பத்து தலை ராவணன், துலாபாரம், வெண்ணெய் குடத்துடன் கண்ணன், கோபியர் நடனம், சரஸ்வதி, மகாலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, வாகனங்களில் அமர்ந்து அருள்பாலிக்கும் அம்மன் சிலைகள், பசு மாட்டில் கடவுளின் உருவங்கள் உள்ளிட்ட பல பொம்மைகளை நேர்த்தியாக கை வண்ணத்தில் வடிவமைத்து வருகின்றனர்.
9 நாட்கள் பண்டிகை
சிவராத்திரி சிவனுக்கு உகந்தது என்றால், தேவியருக்கு உகந்தது நவராத்திரி! நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது நவராத்திரி!
திதிகளுக்கு சிறப்பு
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை
நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.
வெற்றி தரும் விஜயதசமி
நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை விஜயதசமி என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி! இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்தச் செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை மற்றும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம். சிறக்க வாழலாம்! மேலும் இந்தநாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.