“குடிமகன்களுக்கு” ஓர் அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் நேரத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசனை!!
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பைனை நேரத்தை அதிரடியாகக் குறைக்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பாலும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 6,800 மதுக்கடைகளும், 4 ஆயிரத்து 271 மது பார்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 28 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அரசுக்கு அதிக வருவாய் கொழிக்கும் நிறுவனமாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், தற்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகின்றது.
திட்டங்களுக்கு டாஸ்மாக் நிதி
டாஸ்மாக் மதுக்கடையின் வருமானம் அரசின் பல்வேறு மக்கள்நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு எதிர்கட்சிகள் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
மதுவிலக்கால் வருவாய் இழப்பு என எச்சரிக்கை
அதே நேரத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு அதிகம் ஏற்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக டாஸ்மாக் விற்பனை நேரத்தை படிப்படியாக குறைக்காலம் எனவும் அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 மணிக்கு பதில் பிற்பகல் 2 மணிக்கு…
அதாவது டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை என நேரத்தை குறைக்க ஒரு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக டாஸ்மாக் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம்.
ரூ5,000 கோடி இழப்பு ஏற்படும்
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் எனவும், இதனை ஈடுகட்ட மாற்று வழிகளை உடனே ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்க டாஸ்மாக் பணியாளர்கள் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு?
இருந்தாலும் டாஸ்மாக் கடைகளின் நேரக்குறைப்பு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவிப்பார் என்றே கூறப்படுகிறது.
தேர்தல் வந்தா எல்லா அறிவிப்பும் வரும்..