அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் இல்லை.. வழக்கம்போல் 31ந் தேதி வழங்குவதாக அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படாது என்றும், 31-ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளிக்காக 28-ந்தேதி சம்பளம் வழங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு கருவூலம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கம் போல் 31-ந்தேதி வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் மாதம் 29ம் தேதியன்று வருவதால், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க கோரிக்கைவிடுத்துள்ளது.
மேற்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து, 2016ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதததிற்கான ஊதியத்தினை அக்டோபர் 28ம் தேதியன்று வழங்க சம்மந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்க முதன்மைச் செயலர் / கருவூல கணக்கு ஆணையருக்கு அனுமதியளித்து ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே ஊதியம் என அறிவிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எண் 277 செல்லாது என கருவூலகத்துறை வெளியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்புபடி வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.