கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாது.. திரையுலகினருக்கு "ஸாரி" சொன்ன தமிழக அரசு!
சென்னை : சினிமாத் துறை மீதான கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் திகதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.
சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை வரி செலுத்தினால் திரையுலகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த ஜூலை 3ம் தேதி முதல் 4 நாட்கள் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன.
இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட திரைத் துறை அமைப்பினர் ஜூலை 2ம் தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதில் எந்த முடிவும் எட்டப்படாததையடுத்து ஜூலை 3ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை திரைத்துறையினர் ஜூலை 3ம் தேதியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் இது அரசுக்கு எதிரான போராட்டமல்ல என்று அறிவித்த தியேட்டர் உரிமையாளர்கள், ஜூலை 7ம் தேதி முதல் தியேட்டர்களை இயக்கத் தொடங்கினர். இந்நிலையில் இன்று 3ம் கட்ட இறுதிப் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.