ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி..இன்று தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா..
சென்னை : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக ம.தி.மு.க. சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அமளை, வேலிகாத்தான் செடிகள் படர்ந்து நீரை உறிஞ்சுகிறது. அணையில் 8 அடி ஆழம் நீர் தேங்கி நிற்க வேண்டிய இடத்தில் ஒரு அடி தண்ணீரே தேங்கி நிற்கிறது. சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாவதால், மூன்று போகம் விவசாயம் நடைபெற்ற பகுதி ஒரு போகமாக மாறிவிட்டது. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பருவ மழையைக் கருத்தில் கொண்டு ஜூன் 10-ஆம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அணையைத் தூர் வார அனுமதி வழங்க வேண்டும் என்றும், அனுமதி வழங்கத் தவறினால், ஜூன் 11-ஆம் தேதி தூர் வாரும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியும், தமிழக அரசு தூர் வாரும் பணிகளைத் தொடங்கவில்லை.
இந்நிலையில், ஜூலை 6-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர் வாரும் போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதனிடையே திடீர் திருப்பமாக ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரும் பணியை தமிழக அரசு இன்று தொடங்குகிறது. இப்பணியை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.