கச்சத்தீவின் கதவை தட்டி இலங்கைக்கு அச்சமூட்டியவர் ஜெயலலிதா!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத் தீவினை மீட்க கடும் போராட்டங்களை மேற்கொண்டார்.
சென்னை: கச்சத் தீவினை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததற்கு எதிராக உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார்.
1974-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்து. இந்த கச்சத்தீவு வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். அத்துடன் கச்சத்தீவு விவகாரம் குறித்து தான் பிரதமருக்கு எழுதிய கடிதங்களையும் அதில் இணைத்தார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியை சார்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. .
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மேற்கு வங்க மாநிலம் பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை சுட்டிக்காட்டி, கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வழக்கு தொடர்ந்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.
மேலும், கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை ஏற்றவுடன் கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை, தன்னை ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தினையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையும் மேற்படி வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. இந்திய நாட்டுக்கு சொந்தமான ஒரு பகுதியை, அந்நிய நாட்டிற்கு கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பளித்து உள்ளது.
இந்த தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை தாரை வார்க்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது செல்லத்தக்கதல்ல.
கச்சத்தீவு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சொந்தமானது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு வரை சென்று மீன் பிடிக்கவும், மீன் வலைகளை கச்சத்தீவில் உலர்த்தவும் உரிமை உண்டு. ஆகவே, தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதற்கு உதவும் வகையில் கச்சத்தீவு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவுடன், கச்சத்தீவு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அரசு சார்பாக எழுதப்பட்ட 11-க்கும் மேற்பட்ட கடிதங்களையும் ஆவணமாக எடுத்துக் கொள்ளும்படியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீ்ட்போம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார் என நம்புகிறேன் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.